

சென்னை,
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
அதன்படி, மேற்கு வங்காளம் (மே 7), தமிழகம் (மே 10) அசாம் (மே 20), கேரளா (மே 23) , புதுச்சேரி (ஜுன் 15) என 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்றுள்ளது. மேலும், விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அதேவேளை, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
அதன்படி, வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் தமிழகம் வர உள்ளனர்.
தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் சென்னையில் வைத்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது, தேர்தல் முன்னேற்பாடுகள் , தேர்தல் தேதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.