கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்முக அலுவலக பயிற்சிகள் நிறுத்தம்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்முக அலுவலக பயிற்சிகள் நிறுத்தம் அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் தகவல்.
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: சிவில் சர்வீஸ் பணிகளுக்கான நேர்முக அலுவலக பயிற்சிகள் நிறுத்தம்
Published on

சென்னை,

அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனர் மற்றும் பயிற்சித் துறை தலைவருமான வெ.இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை மேற்கொண்டு அரசு அலுவலர்களுக்கும், குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ் பணிகள்) பயிற்சி மாணவர்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் நேர்முக பயிற்சிகளை நடத்த அனுமதித்த பின்னர், பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த பயிற்சிகள் AICSCC TN, AIM TN என்ற 2 யூ-டியூப் சானல் வழியாகவும் ஒளிபரப்பப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து நேர்முக அலுவலக பயிற்சிகள் தற்காலிகமாக அண்ணா மேலாண்மை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் தமிழக குடிமைப்பணி ஆர்வலர்கள் பாதிப்படையாத வண்ணம், சமகால நிகழ்வுகளினால் ஏற்படும் சமூக, பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும் நடைமுறை குறித்த பல்வேறு உரைகள், பல்வேறு தலைப்புகளில் சிறந்த வல்லுநர்களால் மேற்சொன்ன 2 யூ-டியூப்புகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செயல் முறைகள் அரசு பயிற்சிக்கான தளர்வுகள் நடைமுறைப்படுத்தும் வரை, கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com