

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்குப்பின் மாநில அரசியல் களம் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
அதேவேளை, தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. மேலும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தவெகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடு, கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.