குளறுபடியின் உச்சமான குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


குளறுபடியின் உச்சமான குரூப்-4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 July 2025 1:30 PM IST (Updated: 22 July 2025 1:31 PM IST)
t-max-icont-min-icon

மெத்தனப் போக்கின் உச்சத்தில், அரசு இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.

பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.

பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?

ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடி உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜூலை 12ம் தேதி அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களின் குரலாக அதிமுக என்றும் ஒலிக்கும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story