படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து கடந்த மாதம் 31-ந் தேதியன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரையிலான தகுதிக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.750 வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1,000 வீதமும் வழங்கப்படும். இதர மனுதாரர்களுக்கு பள்ளியிறுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 வீதமும், பிளஸ்-2 தகுதிக்கு மாதம் ரூ.400 வீதமும் மற்றும் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.600 வீதமும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச குடும்ப ஆண்டு வருமானம் ஏதுமில்லை. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் கடந்த 31-ந் தேதி நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (மே) 31-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆண்டு தோறும் அளிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அடுத்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com