நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: 8,052 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

நெல்லையில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சிகளை மாவட்ட கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: 8,052 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
Published on

திருநெல்வேலி,

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026, வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் பணிபுரியவுள்ள 8,052 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம்கட்டப் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் மொத்தம் 8,052 அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி: சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி- 1,852 பேர்.

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரி- 1,540 பேர்.

பாளையங்கோட்டை: தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி- 1,420 பேர்.

நாங்குநேரி: வள்ளியூர் கெயின்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி- 1,676 பேர்.

ராதாபுரம்: பணகுடி புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி- 1,564 பேர்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பின்வரும் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

படிவம் 17C மற்றும் 17A ஆகியவற்றைப் பதிவு செய்தல்.

தலைமை அலுவலர் செயலி (Presiding Officer App) மூலம் மாதிரி வாக்குப்பதிவு விவரங்களைப் பதிவேற்றுதல்.

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவு செய்தல்.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் விவரங்களைச் செயலியில் பதிவேற்றம் செய்தல்.

ஆட்சியர் ஆய்வு மற்றும் தபால் வாக்குப்பதிவு:

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சுகுமார், சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் பயிற்சிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்துப் பயிற்சி மையங்களிலும் தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இன்று தபால் வாக்கு செலுத்த இயலாதவர்களுக்கு, ஏப்ரல் 19-ம் தேதி அதே மையங்களில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்" என தெரிவித்தார்.

அடுத்தகட்டப் பணிகள்:

வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நாளை (ஏப்ரல் 16) அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்கள் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இப்பணி மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்வில் பாளையங்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com