

சென்னை,
மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் முதல்முதலில் சட்டமன்ற உறுப்பினராக எம்ஜிஆர் வெற்றி பெற்றார். தனி கட்சி தொடங்கி முதலமைச்சராக இருந்தபோதும், சட்டமன்றத்தில் ஒருவர் கலைஞர் பெயரை குறிப்பிட்டு பேசியபோது அதை கண்டித்தார்; அப்போது, உங்களுக்கு நான் தலைவராக இருக்கலாம்.. எனக்கு தலைவர் கலைஞர்தான்” என்று சொல்லி பேசியவரிடம் வார்த்தையை வாபஸ் வாங்க சொன்னார் எம்ஜிஆர்; இது வரலாறு.
ஆட்சி மாற்றம் நடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாடு அதலபாதாளத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடக்கும் அதிக குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள். ஓட்டுப் போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள். திமுக வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில் தான் வண்டி ஓடுகிறது.
திமுக தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். கடந்த 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழ்நாடு இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டியது. பார்த்துப் பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை நாம் சீரழிய விடக்கூடாது. திமுக ஆட்சியின் மேல் இருந்த நம்பிக்கையில்தான் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன” இவ்வாறு அவர் கூறினார்.