தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி.. 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ரெயில்கள் ஒரு மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி.. 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
Published on

ஜோலார்பேட்டை,

பெங்களூரு ரெயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 11.50 மணியளவில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில் என்ஜினுக்கு மின் சப்ளை வராததாதல் ரெயில் நடுவழியில் நின்றது. உடனடியாக என்ஜின் டிரைவர் கீழே இறங்கி தண்டவாள பாதையில் சென்று பார்த்தபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனையெடுத்து திருப்பத்தூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக திருப்பத்தூர் ரெயில் நிலைய எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்கள் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் சரி செய்யும் பணி நடைபெற்றது. அதன் பிறகு நள்ளிரவு 12.54 மணியளவில் ரெயில் அந்த இடத்திலிருந்து புறப்பட்டது.

இதனால் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மார்க்கத்தில் செல்லும் ரெயில்களான சென்னை -ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை -மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை -கோவை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கோரக்பூர்-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7 ரெயில்கள் ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டதால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com