பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பேரூராட்சிகளில் பணியிடங்களை தனியாருக்கு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

குழித்துறை, 

பேரூராட்சிகளில் பணியிடங்களை தனியாருக்கு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்கள் பாதிக்கும் வகையில் பணியிடங்களை தனியாருக்கு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுபோல் உண்ணாமலைக்கடை, திற்பரப்பு, குலசேகரம், கருங்கல், புதுக்கடை, திங்கள்சந்தை போன்ற பேரூராட்சி அலுவலகம் முன்பும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

42 பேரூராட்சி அலுவலகம் முன்பு...

இதுகுறித்து குமரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் சங்க செயலாளர் பிரான்சிஸ் சேவியர் கூறியதாவது:-

பேரூராட்சி ஊழியர்களின் நலன்களை பாதிக்கும் அரசாணை எண் 139-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் நேற்று 42 பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை பேரூராட்சி அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின்தாஸ் உள்பட பலர் முன்னின்று நடத்தினர்.

எங்களது கோரிக்கையை ஏற்று அரசாணையை ரத்து செய்யவில்லை என்றால் வருகிற 24-ந் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com