தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபை ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் போன்றே வழங்கப்படும். அதன் விவரம் பின்வருமாறு,

1. கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை.

2. விபத்தால் மரணம் ஏற்பட் டால் உதவித் தொகை ரூ.1 லட்சம்.

3. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை.

4. இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம்.

5. ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம்.

6. திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பெண்களுக்கு ரூ.5 ஆயிரம்.

7. மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு/ கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம்.

8. கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500.

9. முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/-

மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் இந்த நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்து பயனடையுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com