12-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

12-வது மாடியில் இருந்து குதித்து சிவில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
12-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை
Published on

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை 200 அடி ரேடியல் சாலையில் 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 9-வது மாடியில் வசித்து வந்தவர் சம்பத் (வயது 36). இவர், சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி சுகன்யா. இவர், தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆர்மன் (5) மற்றும் ஆதிரன் என்ற 9 மாத குழந்தை என 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சம்பத் தனது மகன் ஆர்மனுடன் படுத்து தூங்கினார். 9 மாத குழந்தையுடன் அவருடைய மனைவி மற்றொரு அறையில் படுத்து இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடிக்கு சென்ற சம்பத், திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த ஒரு காரின் மீது விழுந்தார். இதில் அந்த காரும் சேதம் அடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பள்ளிக்கரணை போலீசார், சம்பத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத் தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்சினையா? அல்லது அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினையா? அல்லது பணி நெருக்கடி காரணமா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை மேலிருந்து கீழே வீசினார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com