

சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவு தரமற்ற நிலையில் இருந்ததாகவும், ஆவடி மாநகராட்சியில் வழங்கப்பட்ட உணவில் இறந்த நிலையில் பல்லி இருந்ததாகவும் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
ஏற்கனவே, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு பல்வேறு மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், ஒரு சில மாநகராட்சிகளில் வழங்கப்படும் உணவும் தரமற்றதாக இருப்பது தூய்மைப் பணியாளர்களின் உடல்நலத்தையும், ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சாலைகள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் என நகரத்தின் அனைத்து அசுத்தமான இடங்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருவேளை உணவைக் கூட தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் வழங்க முடியாத தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அரசு, மறுபுறம் தூய்மைப் பணியாளர்களுக்காக நல முகாம் நடத்துகிறோம் எனும் பெயரில் அவர்களை அமைச்சர்களும், அவரது உறவினர்களும் ரீல்ஸ் எடுக்கும் விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
எனவே, தூய்மைப் பணியாளர்களுக்குத் தரமற்ற உணவை வழங்கிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் தரமான, சுத்தமான, ஆரோக்கியமான உணவு தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.