

கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள தாழ்கெண்டிக்கல் வனப்பகுதி வடக்கு ஓடை அருகே சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின்பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற வனப்பகுதிக்கு விரைந்து சென்றபோது, அங்கு தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பேரல்களில் இருந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.