ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு
x

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அதைபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி காளை மாடு சிலையில் ஒலிபெருக்கி, கட்சி கொடி, பேனர்கள் வைத்து நாம் தமிழர் கட்சியினர் பரப்புரை செய்ததாக மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாதக வேட்பாளர் சீதாலெட்சுமி உட்பட 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம் சாட்டினார். தனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும், பிரசாரம் செய்வதற்கு அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடித்ததாகவும், இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என்னை பிரசாரம் செய்யவிடாமல் திமுகவினர் தடுப்பதாகவும் தெரிவித்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் இதை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story