

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் இருட்டனைபுதூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது நண்பருடன், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அங்கு வந்து அவர்களிடம் தண்ணீர் கேட்பது போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள், திடீரென மகேந்திரன் மற்றும் அவருடைய நண்பர் வைத்திருந்த 2 செல்போன்களை திருடி கொண்டு அங்கிருந்து ஓடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேந்திரனும், அவரது நண்பரும் துரத்தி சென்று 2 வாலிபர்களையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து மகேந்திரன் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம் ரங்கா வீதியைச் சேர்ந்த சுதர்சனன் (21), கருங்கல்பாளையம் கண்ணையன் வீதியை சேர்ந்த அஜித்குமார் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.