

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புகுந்த காட்டு யானை, விவசாய பயிர்களை துவம்சம் செய்தது. வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பி, நீண்ட போராட்டத்திற்குப் பின் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு எருமைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் திடீரென ஒரு காட்டு யானை புகுந்தது. தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை அந்த யானை கால்களால் மிதித்தும், தின்றும் பயங்கரமாக சேதப்படுத்தியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஜீராகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் தலைமையிலான வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தங்களது வாகனங்களின் 'சைரன்' ஒலியை அலறவிட்டும் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கடும் போராட்டத்திற்குப் பிறகு, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை மெல்ல நகர்ந்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே அப்பகுதி விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.