

சென்னை,
ஜனவரி 28-ந் தேதி தைப்பூசத் திருவிழாவின்போது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வரும் ஜனவரி 28-ந் தேதியன்று நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பின்பற்ற வேண்டிய முன்னேற்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 29-ந் தேதி (நேற்று) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மாவட்டம் பேரூர் ஆதினம், ஸ்ரீலஸ்ரீ மருதாச்சல அடிகள், நாகை மாவட்டம், ஸ்ரீதருமபுர ஆதினம், தென்மண்டல கட்டளை விசாரணை பிரதிநிதி திருஞான சம்பந்த தம்பிரான், பழனி ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் மாநில அமைப்பாளர் செந்தில்குமார், பழனி பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சேகர், பழனி சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பழனி மணிகண்ட ஐயப்பன் போஜனம் அமைப்பைச் சேர்ந்த சுமதி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், காவல் படைத் தலைவர், காவல் துறைத் தலைவர், இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை ஆணையர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.