

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் சர்ச்சையாக பேசியது தொடர்பாக முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, எஸ்.பி. அலுவலகத்தில் அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 5 மணி நேர விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி போலீசார் நெருக்கடி தருகிறார்கள். த.வெ.க.வில் சேரச்சொல்லி என்னை போலீசார் நிர்பந்திக்கிறார்கள். நான் ஒத்துக்கொள்ளவில்லை. நான் ராஜினாமா செய்ய மாட்டேன். தி.மு.க.வில் உறுதியாக இருப்பேன். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்ப்போம். காவல்துறை அராஜகம் செய்கிறது” என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை த.வெ.க.வில் இணைய வலியுறுத்துகிறார்கள் என அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் அதற்கு பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற கேவலமான நபரை த.வெ.க.வில் சேர்க்க மாட்டோம். அவரை போன்ற ரவுடிகளை, தவமிருந்தாலும் த.வெ.க.வில் சேர்க்க மாட்டோம்.
முதல்-அமைச்சர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்க மாட்டோம். அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு அவர் மீது வழக்குப் போடாமல் இருக்கமுடியாது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் கைது செய்யட்டுள்ளார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரை ராஜினாமா செய்ய சொன்னது யார்?.. ஆதாரத்துடன் கூற வேண்டும்.
த.வெ.க.வில் இணைந்தவர்கள் மீது வழக்குகள் இருந்தாலும் அது தொடர்பான விசாரணை தொடரும். மாற்றுக் கட்சியில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் இல்லை. இங்கு எதிலும் ஊழல் கிடையாது. எங்கேயும் ஊழல் கிடையாது. தவறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும்.
யார் ஊழல் செய்திருந்தாலும் வழக்கு பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.