கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடித்தாலும் திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி மாறுவது இயல்பான ஒன்றுதான் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடித்தாலும் திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்
Published on

சிவகங்கை,

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுத்ததை வரவேற்கிறேன். தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி மாறுவது இயல்பான ஒன்றுதான். கடந்த 2014 மக்களவைத் தேர்தலை தவிர்த்து, 2004-ம் ஆண்டிலிருந்து நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருந்தோம். இந்தத் தேர்தலில் விஜய் முதல்-அமைச்சராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் திமுக கூட்டணியிலேயே நீடித்தாலும் கூட, திமுகவால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.

அதேசமயத்தில், தவெகவும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்தது. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவதற்காக தவெகவுக்கு காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. இது இயல்பான முடிவுதான். ஒருவேளை திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்து, காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளித்திருந்தால், அவர்களது (திமுக) குற்றச்சாட்டு சரியானது.

தொழில் முதலீடுகளை ஈர்க்க அனைத்து விதமான உத்திகளையும் கையாளலாம். ‘இன்ஸ்டாகிராம்’ என்ற சமூக வலைதளம் ஒரு தகவல் தொடர்பு சாதனம் தான். அதில் அமைச்சர் தொழில் முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை. உலகிலேயே பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கூட, தனது அறிவிப்புகள் அனைத்தையும் 'எக்ஸ்' தளத்தில் தான் வெளியிடுகிறார்.

தவெக அரசு குறித்து யாரும் அவசரமாக 'ரன்னிங் கமென்ட்ரி' கொடுக்க தேவையில்லை. அமைச்சர் செங்கோட்டையன் போன்றோரை தவிர, 100-க்கும் மேற்பட்டோர் முதன்முறை எம்எல்ஏக்கள். அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். தவெக எம்எல்ஏவை குத்துவிளக்கு ஏற்றவிடாமல் சென்னை மேயர் அவமதித்துவிட்டார் என்பதை சர்ச்சையாக கருத தேவையில்லை. இதுபோன்றதை விட்டுவிட்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பேசினால் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com