நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் அருகே நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுரோட்டில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

திருவள்ளூரை அடுத்த கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவர் தனது மனைவி அர்ச்சனா (23)வுடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த சந்தோஷ் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக கணவன் மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளை சாலையின் நடுவில் விட்டு விட்டு இறங்கி உயிர் தப்பினார்கள்.

சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com