

சென்னை,
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இயல்பாகவே பன்மடங்கு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு விரைவாக முடிந்துவிடுவதால், கணிசமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இக்காலகட்டங்களில் இணையவழி முன்பதிவுத் தளங்களில் பேருந்துக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்த்தப்படுவதாகப் பயணிகள் முன்வைக்கும் தொடர் புகார்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன. தேவை அதிகரிக்கும் போது கட்டணம் உயர்த்தப்படுவது இயல்பு எனக் கூறப்பட்டாலும், இது சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பயணச் செலவைக் கடுமையாகப் பாதிக்கிறது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் போக்குவரத்துத் துறையும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.
வழித்தடங்களின் தூரம் மற்றும் பேருந்து வசதிகளுக்கு ஏற்ப (Seater, Sleeper, AC) அரசு நிர்ணயித்த அதிகாரப்பூர்வ அதிகபட்சக் கட்டணப் பட்டியலை இணையதளம் மற்றும் பேருந்து நிலையங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தனியார் பயண முன்பதிவு செயலிகள் மற்றும் இணையதளங்களில் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விடக் கூடுதல் கட்டணம் பட்டியலிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய டிஜிட்டல் கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பயணிகள் பயணச்சீட்டு ஆதாரத்துடன் உடனடியாகத் தெரிவிக்க எளிமையான வாட்ஸ்அப் எண், தனிச் செயலி அல்லது 24 மணி நேரக் கட்டணமில்லா உதவி மையத்தை வலுப்படுத்த வேண்டும். விடுமுறை தினங்களில் முக்கிய சுங்கச்சாவடிகள் மற்றும் புறப்படும் இடங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, விதிமீறல் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய சட்டரீதியான அபராதங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தாமதமின்றி எடுக்க வேண்டும்.
தனியார் பேருந்துகளின் மீதான அதீதச் சார்பைக் குறைக்க, அதிகத் தேவையுள்ள வழித்தடங்களில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குகிறது என்றாலும், அந்த வகையான பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகள் முற்றிலும் சரி செய்யப்பட வேண்டும்.
பயணிகளின் நியாயமான பயண உரிமையையும், தனியார் பேருந்து உரிமையாளர்களின் தொழில் நடைமுறைகளையும் சமநிலையில் பேணும் வகையில் அரசு ஒரு நிரந்தர ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.