தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? - தொழில் அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? என்பது பற்றி தொழில் அதிபர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? - தொழில் அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Published on

சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. அதன் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தமிழ்நாட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகளை கொண்ட தொழிற்சாலைகள் தவிர வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழுமத்தின் கியூப் இன்வெஸ்மெண்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெள்ளையன், டி.வி.எஸ். அன்டு சன்ஸ் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குனர் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராமராஜா, தோல் ஏற்றுமதிக் குழுமத்தின் தலைவர் அகில் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சீனிவாசன் ஆகிய தொழில் அதிபர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது என்.சீனிவாசன் பேசியதாவது:-

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. நீங்கள் தமிழகத்தை காப்பாற்றி மிகப் பெரிய நன்மையை செய்திருக்கிறீர்கள்.

இயக்கத்தை திரும்பத் தொடங்குவதில் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் பிரச்சினைகள் உள்ளன. சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அதை கொண்டு செல்வதில் பிரச்சினைகள் உள்ளன. சிமெண்டை கொண்டு செல்லும்போது நடுவழியில் நிறுத்தப்படுவதும், டிரைவர்கள் அங்கிருந்து சென்றுவிடுவதும் பிரச்சினையாக உள்ளது.

சிமெண்டை தயாரித்து விற்பனை செய்வதில் பிரச்சினைகள் இல்லை. அனுமதி கிடைத்ததும் 10 நாட்களில் இயக்கத்தை தொடங்கிவிடலாம்.

வருமானம் இல்லாத நிலையில், நிதிச் சிக்கலில் இருக்கும்போது, ஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் பல்வேறு இடற்பாடுகளை தொழிற்சாலைகள் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. வங்கிகளில் இருந்து பணம் பெற்று சம்பளத்தை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

உங்கள் முடிவின் அடிப்படையில் செயல்படுவோம். தொழிற்சாலை இயக்கத்தை அதற்கான தரத்தோடும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் இயங்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com