

கிருஷ்ணகிரி,
* கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் ஒரு பாடத்தில் மாணவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவர் அங்குள்ள மாந்தோப்பில் இருந்த மாமரத்தில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவருடைய 16 வயது மகள் பிளஸ்-2 தேர்வில் வரலாறு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி அங்குள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது 16 வயது மகன் தமிழ். ஆங்கிலம், வணிகவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* வேலூர் காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது இளைய மகன் பிளஸ்-2 தேர்வு முடிவில் 600-க்கு 372 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக மனவேதனையோடு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
* திருப்பூர் மாவட்டம் சாணார்பாளையம் முத்துச்சாமி தோட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது 17 வயது மகள், 600-க்கு 397 மதிப்பெண்கள் கிடைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் குறைவான மதிப்பெண்களே கிடைத்து இருப்பதாகவும், இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று தனது குடும்பத்தினரிடம் மனவேதனையுடன் தெரிவித்தார்.
இந்தநிலையில் மாணவிக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், தோட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த மாணவி, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த காலத்து குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த அழுத்தம் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.
நமக்கு கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு மன ஆறுதலை கொடுங்கள்.
‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள். இதுக்கு மேலயும் வாழ்க்கை இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.
பிள்ளைளுக்கான பிரச்சனைகளை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.