

சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுனராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பித்ததால் கடந்த 2003-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல கோர்ட்டு உறுதி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசன் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், போலி சான்றிதழ் அளித்ததாக சொல்லப்படும் சிலர், சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளபோது, என்னை மட்டும் பணிநீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். மனுதாரரின் இந்த குற்றச்சாட்டு, போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதாரர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது. அவரை பணிநீக்கம் செய்தது சரிதான். எனவே, அவரது வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
அதேசமயம், போலி சான்றிதழ் அளித்தவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.