போலி டாக்டர் கைது

குடியாத்தம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர் கைது
Published on

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி ஜிட்டபல்லி கிராமத்தில் போலி டாக்டர் ஒருவர் கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோருக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களது உத்தரவின் பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, மருந்தாளுனர் லலித்குமார், குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயந்தி, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் ஜிட்டப்பல்லி கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தனர்.

அதில் அதேகிராமத்தை சேர்ந்த மஸ்தான் (வயது 41) என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீசார் மஸ்தான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் இதற்கு முன்பு ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com