தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு - பொதுமக்கள் சாலை மறியல்
Published on

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மல்லப்பா(வயது70). இவருக்கு தர்மாபுரம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 2.00 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை தோட்டத்தில் புகுந்து நாசம் செய்துள்ளது.

இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது. அப்போது காவலுக்கு இருந்த விவசாயி மால்லப்பாவை யானை துதிக்கையால் தூக்கி காலில் போட்டு மிதித்ததில் சம்பவ இடத்திலயே துடிதுடித்து உயிரிழந்தார். இன்று காலை அவரது குடும்பத்தினர் சென்று பார்த்த போது தான் மல்லப்பா வாழை தோட்டத்திற்குள் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் யானையை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், உயிரிழந்த விவசாயி மல்லப்பாவின் உடலை எடுக்க விடாமல் வனத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தாளவாடி இருந்து திகினாரை செல்லும் சாலையில் சாலை மறியலும் செய்தனர்.

இதனால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த ஆசனூர் வனகோட்ட அதிகாரி, விவசாய தோட்டத்தில் யானைகள் புகாதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த விவசாயின் உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com