

கடமலை-மயிலை ஒன்றியம் மூலக்கடை, முத்தாலம்பாறை, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் போதுமான அளவில் மழை பெய்த காரணத்தால் தற்போது அவரை கொடிகளில் பிஞ்சுகளின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிஞ்சுகள் அதிகரித்ததை தொடர்ந்து கொடிகளில் உரம், மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டும் அவரை உற்பத்தி அதிக அளவில் காணப்பட்டது. அதே நேரம் 1 கிலோ அவரை ரூ.20-க்கும் குறைவாக விற்பனையானதால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அவரை விலை அதிகரித்தால் மட்டுமே கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.