விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு

த.வெ.க. அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு
Published on

சென்னை,

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சையில் தி.மு.கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காகவும் சட்டமன்றத்தில் குரல்கொடுத்ததற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியதற்காக, த.வெ.க. அரசின் காவல் துறை, எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்தது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். இந்தக் கூட்டு இயக்கத்தில் உள்ள 84 விவசாய அமைப்புகளும், த.வெ.க. அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த வகையில், தங்களுடைய போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கமாறும், சட்டமன்றத்தில் குரல் எழுப்புமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், கழகத் தலைவரின் வழிகாட்டுதலில், சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், விவசாயிகளுக்கு என்றும் உற்றத்துணையாக இருப்போம் என்றும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com