

வேலூர்,
வேலூர் வசந்தபுரம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (23 வயது). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் காசாளராக பணிபுரிந்து வந்தார். ஐஸ்வர்யாவின் தந்தை கடந்த மார்ச் மாதம் வேலூர் நேதாஜி மைதானம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். மேலும் தந்தை அடிக்கடி கனவில் வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் ஐஸ்வர்யா தூக்கில் தொங்கினார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனடியாக அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஐஸ்வர்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.