திருமண விழாவில் நகை திருடிய தந்தை-மகன் கைது

திண்டுக்கல்லில், திருமண விழாவில் நகை திருடிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
திருமண விழாவில் நகை திருடிய தந்தை-மகன் கைது
Published on

மதுரை விளாங்குடியை சேர்ந்த சித்திரைவிநாயகர்-சித்ரா தம்பதியின் மகன் வெற்றிவேலன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்காக ஒரு நாளுக்கு முன்பே அனைவரும் திண்டுக்கல்லுக்கு வந்து மண்டபத்தில் தங்கினர். இதில் சித்ரா தனது 23 பவுன் நகைகளை பையில் வைத்து, அறையில் வைத்து இருந்ததாக தெரிகிறது. பின்னர் நகைகளை அணிவதற்கு தேடிய போது அவற்றை காணவில்லை.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் விசாரித்தனர். மேலும் திருமண மண்டபம் மற்றும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கரூரை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் அவனுடைய தந்தை நகைகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கரூர் சென்று, நகைகளை திருடிய தந்தை-மகனை கைது செய்தனர். விசாரணையில், திருமண விழாவுக்கு செல்வது போல் மண்டபத்துக்குள் நுழைந்து நகைகளை திருடியதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com