‘பா.ஜ.க. என்றால் பயம்... பாம்பை பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’ - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி

நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் தன்னிடம் கூறினார் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
‘பா.ஜ.க. என்றால் பயம்... பாம்பை பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’ - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி
Published on

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “பா.ஜ.க.வை தேசிய அளவில் வீழ்த்த தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒரே அணியில்(இந்தியா கூட்டணி) இணைய வேண்டும்” என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பா.ஜ.க.வைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்திருக்கிறது. பிரதமர் மோடியைப் பார்த்து பயந்து போய் இருக்கிறார்கள். பிரதமர் மோடி யாருக்கும் எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்து குறித்து அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாம்புகளைப் பார்த்தால் எல்லாரும் பயப்படத்தான் செய்வார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, “சமூக நீதித் துறையில் அமைச்சரா இருக்கும் நீங்கள் உங்கள் துறையில் சுதந்திரமாக செயல்படுறீர்களா? அதற்கான சுதந்திரத்தை இந்த அரசு உங்களுக்கு கொடுத்திருக்கிறதா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வன்னி அரசு, “சமூகநீதி துறைக்குள் இருக்கின்ற ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சம்பந்தமாக தமிழ்நாடு முழுக்க இது மாதிரியான செயல்பாடுகள் இதற்கு முன் இருந்திருக்கிறதா? என்கின்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். நான் பதவியேற்றவுடன் முதல்-அமைச்சர் விஜய் என்னை அழைத்து, ‘நீங்கள் சுதந்திரமாக செயல்படுங்கள். எதை பற்றியும் நீங்க கவலைப்பட வேண்டியதில்லை. எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. நீங்க இந்த மக்களுக்கான முன்னேற்றத்திற்கு இந்த துறையின் மூலமாக செயல்பட வேண்டும்’ என்று எனக்கு வழிகாட்டி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் பொறுப்பு அமைச்சராகவும் என்னை நியமித்து, தமிழ்நாடு முழுக்க இந்த துறையின் மூலமாக மிகப்பெரிய செயல்பாடுகளை செய்ய முதல்-அமைச்சர் விஜய் ஊக்கப்படுத்தி வருகிறார். எனவே, இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்தோடு சொல்லப்படுகின்றது. என்னுடைய செயல்பாடுகளே அதற்கு சாட்சி” என்று தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com