

சென்னை,
மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்த 3 வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ந் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று (26 ஆம் தேதி) கருப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை, உணர்வுகளை மதித்து சட்டங்களை திரும்பப் பெற முன்வரவில்லை. இது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யாதது கவலையளிக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். விவசாயிகள் போராட்டம் நடத்தி 6 மாதங்கள் ஆன பின்னரும் தீர்வு ஏற்படவில்லை. விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.