தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது


தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
x

தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சுங்கச்சாவடிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க இந்த அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூல் அமலில் உள்ளது. அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 46 சுங்கச்சாவடிகளுக்கு இன்று (ஏப்ரல்-1ந் தேதி) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story