அயன் செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே அயன் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் சக்திமுருகன். இவர் தா.பழூரில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி பிரியா (33 வயது). இவர் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
தற்போது, பள்ளி காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகளை அவரது தாய் வீட்டிற்கு லட்சுமி பிரியா அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணி ஆகியும் லட்சுமி பிரியா போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை. மேலும் செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக போலீசார் லட்சுமி பிரியா வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லட்சுமி பிரியா அங்கு இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் லட்சுமி பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்காக லட்சுமி பிரியா நேற்று காலையில் தயாராகி கொண்டிருந்தார். இதற்காக சீருடையை அயன்பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அயன்பாக்சில் இருந்து மின்சாரம் லட்சுமி பிரியா மீது பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






