வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
Published on

திருவண்ணாமலை:

கீழ்பென்னாத்தூர் எலந்தம்புரை கொல்லைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 63). இவரது மனைவி பட்டு (59). இவர்களது மகன் பச்சையப்பன் (35). இவருக்கும் ராதா என்பருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் பச்சையப்பன் ராதாவிடம் வரதட்சணை கொடுமை செய்து வந்து உள்ளார். இது குறித்து 2 முறை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு கணவன் - மனைவிக்கு இடையே சமாதானம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் வரதட்சணை கேட்டு பச்சையப்பன், அவரது மனைவி ராதாவிடம் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் ராதாவை அடித்து துன்புறுத்தியதால், ராதா அவரது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் ராதாவை அவரது பெற்றோர் சமாதானம் செய்து வைத்து அவரை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்து வரதட்சணையாக கேட்ட பணத்தை எப்படியாவது கொடுத்து விடுவதாக தெரிவித்து அங்கேயே அவரை விட்டு சென்று உள்ளனர்.

ராதாவின் பெற்றோர் வீடு திரும்புவதற்குள் கணவர் வீட்டில் ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. திருமணமாகி 6 1/2 வருடத்திலேயே வரதட்சணை கொடுமையால் ராதா தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சையப்பன், காசிநாதன், பட்டு ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் பச்சையப்பன், மாமனார் காசிநாதன், மாமியார் பட்டு ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அவர்கள் 3 பேர் பலத்த போலீஸ் காவலுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com