இறப்பு சான்றிதழ் வழங்கரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
இறப்பு சான்றிதழ் வழங்கரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
Published on

இறப்பு சான்றிதழ்

விழுப்புரம் மாவட்டம் அரியலூர்திருக்கை ஊராட்சிக்குட்பட்ட டட்நகரை சேர்ந்தவர் அருளாந்து மனைவி அன்னம்மாள் (வயது 70). இவருடைய கணவர் அருளாந்தின் தந்தை மாணிக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பும், அருளாந்தின் அண்ணன் சவரிமுத்து 25 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனர். அப்போது அவர்களது இறப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விவரம் தெரியாமல் அன்னம்மாள் விட்டுவிட்டார். தற்போது பூர்வீக சொத்து தொடர்பாக அவர்கள் இருவரின் இறப்பு சான்றிதழும் தேவைப்பட்டதால் அன்னம்மாள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவி சங்கீதா (48) என்பவரை அணுகினார்.

ரூ.1000 லஞ்சம்

அதற்கு மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்து வழங்குவதற்காக ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என அன்னம்மாளிடம் சங்கீதா கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அன்னம்மாள், தான் ஏழ்மையான குடும்பம், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும், எப்படியாவது இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் தர முடியும் என கறாராக கூறிய சங்கீதா, அந்த பணத்தை, தான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் கொடுக்கும்படியும் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்னம்மாள், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து அதை சங்கீதாவிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று காலை அன்னம்மாள் எடுத்துக்கொண்டு அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சங்கீதாவிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் சங்கீதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com