சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரெயிலில் பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து டீசல்களை ஏற்றிக் கொண்டு சுமார் 52 டேங்குகளுடன் சரக்கு ரெயில் ஒன்று இன்று அதிகாலை பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலானது திருவள்ளூர் மாவட்டம், ஏகாட்டூர் பகுதியில் சென்ற போது திடீரென ரெயில் பெட்டியின் சக்கரம் தடம் புரண்டது.

இதில், ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பெறி உருவாகி டீசல் டேங்கில் பற்றத் தொடங்கியது. இந்த தீயானது சிறிது சிறிதாக பரவி நான்கு டீசல் டேங்குகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அசம்பாவிதத்தை உணர்ந்த ரெயில் என்ஜின் ஓட்டுநர் ரெயிலை பாதியில் நிறுத்தினார். இதை அடுத்து, ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கிருந்து ரெயில்வே ஊழியர்கள் மட்டும் ரயில்வே போலீசார் வருவதற்குள் ரெயிலின் நான்கு டீசல் டேங்குகள் கொழுந்து விட்டு எறிய தொடங்கின. உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டினர். திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரெயிலில் பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.

உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன். இது சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com