காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு கழிவுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயல் மழை காலத்தில் விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த விசைப்படகுகள் உடைக்கப்பட்டு அதன் கழிவுகளை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பழைய வார்ப்பு பகுதியில் உள்ள யார்டு பகுதியில் மலைபோல் கொட்டி வைத்துள்ளனர்.

உடைக்கப்பட்ட விசைப்படகு கழிவுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி கரும் புகையுடன் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விசைப்படகு கழிவுகளில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யாராவது சிகரெட் பிடித்துவிட்டு நெருப்புடன் கழிவுகள் மீது போட்டதால் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாராவது வண்டும் என்றே தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com