

சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமை செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பிரம்மாண்ட கட்டடம் அமைய உள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து அடுத்தகட்டமாக போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, மயிலாப்பூர் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 மீனவ கிராம மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
நாளை நடைபெறும் இந்த முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், புதிய தலைமை செயலகத்தை மாற்று இடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்களின் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.