

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த பெருமாள்பட்டு ரெட்டி தெருவை சேர்ந்தவர் கஜலட்சுமி (வயது 74). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டிலிருந்து அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகத்தில் முககவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், மூதாட்டியிடம் கோவிலுக்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.
அதற்கு கஜலட்சுமி கோவில் இருக்கும் திசையை கையால் காட்டி விளக்கி கூறியுள்ளார். அதன்பிறகு கோவிலுக்கு செல்வது போல் சென்ற அந்த மர்ம நபர்கள், சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கஜலட்சுமியின் அருகில் வந்து, அவரது கழுத்தில் இருந்த சுமார் 5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.