கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை
Published on

கோவை,

கோவையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் சாடிவயல் வனப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலாத்தலம் உள்ளதால் இங்கு உள்ள இயற்கை அழகினையும் வனவிலங்குகளையும் கண்டு ரசிக்கவும் அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருகை தருகிறார்கள். அருவியில் குளித்து மகிழ்ந்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவும், இன்று காலையும் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது . இதன் காரணமாக இன்று கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

X

Daily Thanthi
www.dailythanthi.com