

தென்காசி,
2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை வெளிப்படுத்தும் வரலாற்று இலக்கிய ஆதாரங்களாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.பொதுவாக, இலக்கியங்களை விட நம்பகரமான ஆதாரமாக தொல்பொருள் ஆய்வு முடிவுகள் கருதப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழர்களின் சீரிய சங்க கால வாழ்வியலை உறுதி செய்தன.
தற்போது தென்காசி மாவட்டத்தில் வைப்பாற்றின் கரையோரத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் தொல்பொருள் ஆய்வுக்களம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர்கள் ஆண்ட சங்க காலத்தில் தமிழர்கள் எப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான வாழ்க்கையை கட்டமைத்து கொண்டு வாழ்ந்தனர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
செங்கற்களாலான கட்டமைப்பு இங்கு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 13 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட சதுர வடிவ கிணற்று சுவரை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கிணற்றுச்சுவர் 40 சென்டிமீட்டர் அகலமும் 20 சென்டிமீட்டர் நீளமும் 7 சென்டிமீட்டர் தடிமனும் கொண்ட செங்கற்களால் களிமண் சாந்து பூசி நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கிணத்துக்குள் இறங்கி ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் கீழடி, அழகன்குளம், பூம்புகார் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு தொல் பொருள் அகழாய்வு களங்களில் காணப்பட்டாலும், முதன்முதலாக செங்கற்களால் கட்டமைக்கப்பட்ட பெரிய கிணறு கண்டறியப்படுவது இங்குதான். இதோடு, மயிலின் ஓவியம் வரையப்பட்ட பெரிய பானை ஓடும் இங்கு கிடைத்துள்ளது.
கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள உலாகப் பொருட்களை வைத்து இரும்பு உலோக ஆலை இப்பகுதியில் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த அகழாய்வுக்கள இயக்குநர் யதீஷ் குமார் கூறுகையில்,"
"இதுவரை 7 அடி ஆழம் வரை தோண்டி ஆய்வுகள் செய்துள்ளோம். மேலும் விரிவாக ஆராயும் போது இன்னும் பல அரிய தகவல்களை எதிர்பார்க்கிறோம்" என்றார். தற்போது உலக வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கரிவலம்வந்தநல்லூரில் 1930 - களில் நடைபெற்ற ஆய்வின்போது ரோமாபுரி நாட்டின் (யவனர்கள்) நாணயங்கள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சங்க கால தமிழ்நாட்டின் கிழக்குக்கரை துறைமுகத்தில் தொடங்கி மேற்குக் கரை துறைமுகம் வரை செல்லும் சாலையை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை கணவாய் அருகில் இந்த ஊர் உள்ளது. அப்போது வணிகர்கள் பயன்படுத்திய இந்த வழித்தடத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக கரிவலம்வந்தநல்லூர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை ஆலோசகரும் மூத்த வரலாற்று அறிஞருமான கே.ராஜன் கூறுகையில், கரிவலம்வந்த நல்லூர் அகழ்வாய்வு களத்தில் கண்டறியப்பட்ட கிணறு மற்றும் செங்கல் கட்டமைப்பு அக்கால கட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றிய சிறந்த நீர் மேலாண்மையைப் பறைசாற்றுகிறது" என்றார்.
("கரிவலம் வந்த நல்லூர்" தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது)