

சென்னை,
வெளிநாடு பயணம் தொடர்பாக அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் சென்று வந்தனர்.
அரசு முறை பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த ஒட்டு மொத்தப் பயணமும் இப்போது ஒரு மிகப்பெரிய சட்ட சிக்கலில் வந்து முடிந்துள்ளது. பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மத்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும்.
இத்தகைய பயணங்களின் போது அவர்கள் 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்' மூலமாகவே பயணிக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் 2 அமைச்சர்களுமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விளக்க நோட் டீஸ் ('ஷோ காஸ்') இந்த விதிமீறலை கடுமையான குற்றச் சாட்டாக கையில் எடுத்துள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ('ஷோ காஸ்') நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது கடமையை சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்த தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.