

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அதிமுக கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் முள்ளா எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு உள்பட கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகிகள் 4 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
ஏ.வி.எம்.வினாயகமூர்த்தி, ( கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் )
க. அழகுவேல் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., ( கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவர் )
எம். பாபு, ( கள்ளக்குறிச்சி நகரக் கழகச் செயலாளர் )
ஏ.வி.எம். ரகு (எ) முகேஷ், ( கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.