

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வழங்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகையை அடகு வைத்து பணம் பெறுவற்காக மோகன் (வயது 45), என்பவர் வந்த நிலையில், அவர் கொடுத்த 24 கிராம் நகைகளை சோதனை செய்து பார்த்தபோது, அவை போலியான நகைகள் என தெரியவந்தது. மேலும் அந்த நபர் வைத்திருந்த ஆவணங்களை சோதித்து பார்த்ததில் இதே நபர் அந்நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் போலியான நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை பிடித்து வளசரவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்ட மோகன், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.