

சென்னை,
பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே புதிய சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே இதுவரை போதிய சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால், இரு தெருக்களையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி கணபதி தெரு–ராமகிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக சென்று வரவும் சிரமம் குறைந்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்க வேண்டும் என்பது எங்களது 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைகிறோம். முதல்-அமைச்சர் விஜய்க்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.
மேலும், பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், கழிவுநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், பழுதடைந்த அல்லது எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேவையான சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.