

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கஜா புயல் நாகை மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. எனினும், புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன.
புயலின் கடுமையான தாக்கத்தினால் 1 லட்சத்து 13 ஆயிரத்து 566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இரவு-பகல் பாராமல், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 24 ஆயிரத்து 941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை நான் மனதார பாராட்டுகிறேன், அவர்களது பணி மெச்சத்தக்கது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டத்தில் உள்ள கோகூர் கிராமத்தை சேர்ந்த வயர்மேன் சண்முகம் மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள களமாவூர் கிராமத்தில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாயும்; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும் என மொத்தம் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.