தடுப்புக்காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

விருத்தாசலத்தில் தடுப்பு காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தடுப்புக்காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
Published on

விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் கடந்த 1-ந்தேதி பாலக்கரை மேம்பாலம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் சு.கீனனூரை சேர்ந்த கதிர்வேல் மகன் ராஜா (வயது 33) என்பது தெரிந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்த போது, அவர் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாசலம், ஊ.மங்கலம், வடலூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 6 கஞ்சா வழக்குகள், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு என 8 வழக்குகள் உள்ளன.

கைது

கஞ்சா வியாபாரியான இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராஜாவை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதன்படி ராஜாவை தடுப்பு காவல் சட்டத்தில் விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com