இன்று பொதுக்குழு கூட்டம்: பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி

அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
அந்த வகையில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்திலும், அதன்பிறகு தர்மபுரி மாவட்டத்தில் மாலை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த சூழ்நிலையில் பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பொதுக்குழுவில் இன்று பங்கேற்க உள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.






