சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தங்க கட்டிகள் பறிமுதல், 2 பேர் கைது.
Published on

சென்னை,

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் கடத்தல்

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மியான்மர் நாட்டை சேர்ந்த இளம்பெண் மற்றும் 30 வயது வாலிபர் ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

ரூ.3 கோடி தங்கம் பறிமுதல், 2 பேர் கைது

இதையடுத்து வாலிபரின் உடைமைகளை அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். பின்னர் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்திய தங்க கட்டிகள் சிக்கியது.

2 பேரிடமிருந்து மொத்தம் 1 கிலோ 967 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com